Pages

Monday, October 25, 2010

பர்வதமலை

சக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை


தென்கையிலாயம் எனப்படும் பர்வதமலை

பருவ விடுமுறை கிடைத்ததால் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு திருஅண்ணாமலைக்கு நண்பர்களுடன் சென்றுவந்தேன்.நண்பர்களின் அழைப்பின் பேரில் திருஅண்ணாமலையின் அருகில் இருக்கும் பர்வதமலைக்குச் சென்றுவரலாம் என முடிவெடுத்தேன்.ஐப்பசிமாத பவுர்ணமி 22.10.2010 வெள்ளிக்கிழமையன்று வந்தது.கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை ஜபித்தவாறு சென்றுவந்ததில் பரம சந்தோஷம்.

24.10.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் பர்வத மலையைச் சென்றடைந்தோம்.வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள்.அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர்.(சிலைகள் அப்படியே முனீஸ்வரனை அடையாளப்படுத்தின).ஒரே இடத்தில் ஏழு முனீஸ்வரர்கள் இருக்க மாட்டார்களே? என மனதில் தோன்றியது.

பச்சையம்மாளின் ஆசியோடு,மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கினால் பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது;காரணம் மலையின் அமைப்பு அப்படி!!!நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது.
பாதிதூரம் கடந்ததும்,கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது.அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்ந்ந்து நிற்கிறது.மாபெரும் திரிசூலங்களும்,ஆணிகளும்,தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலேபயணிக்க உதவுகின்றன.

ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது.

கடப்பாறைப்படி,தண்டவாளப்படி,ஏணிப்படி,ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.

கோவிலைச் சென்றடைந்தால் பூசாரியே இல்லை;நாமாகத் தான் பூஜை செய்ய வேண்டுமாம்.அட!
ஒரு புராணக்கதையை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.நமது அம்மா அப்பாக்களுக்கு இந்தக்கதைதெரிந்திருக்கும்.

ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக பொத்தினாள்.அப்படி பொத்தியது சில நொடிகள்தான்.அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன.விஷயமறிந்த சிவபெருமான் உடனேதனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும்,பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார்.அதனால்,சிவபெருமான் பார்வதியை நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்;அதுதான் உனக்குத் தண்டனை! என அனுப்பியிருக்கிறார்.
அதற்குப் பார்வதி , “உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது.நான் எப்படி?”எனக்கேட்டிட,பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களைஅனுப்பி வைத்திருக்கிறார்.அவர்களின் அகத்தியர்,பராசாசர் உள்ளிட்டோர்தான் பச்சையம்மனின் வாசலில்முனியாக அமர்ந்திருக்கின்றனர்.

முன்பே,பூ,பழங்கள்,பத்தி,கற்பூரம்,மஞ்சள் வாங்கியே சென்றதில்,வழியில் ஆஞ்சநேயர்களின் மிரட்டலால் பழங்களைகொடுத்துவிட்டே மேலேபயணிக்க முடிந்தது.

மேலே மூலஸ்தனத்தைப் பார்த்தால்,ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமியாக சிவபெருமானும்,ஸ்ரீபிரம்மராம்பிகைதாயாராகபார்வதியும் காட்சியளிக்கின்றனர்.

மேலே வந்ததும்,ஏன் தாயே! சிவபெருமான் தான் சோதிப்பதில் நிகரற்றவர்.நீயுமா? சதுரகிரிமலைப்பயணத்தில்கூட நான் இப்படி மலைத்தது இல்லை; இவ்வளவு உயரத்தில் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறாயே!? உனக்கு பயமே இல்லையா?என்றே அவளிடம் கேட்டேன்.அப்புறமாக சொந்த வேதனைகளை சொல்லி நிறைய வரம் வாங்கிவிட்டுத் திரும்பினோம்.

ஆரோக்கியமும் இளமையும் நிறைந்த எங்களுக்கே மலையுச்சியை அடைய 3 மணிநேரம் ஆனது.
மலையை விட்டு இறங்கும்போதும் வேகமாக ஓடி வர முடியவில்லை;மெதுவாகத்தான் வர முடிந்தது.இறங்குவதற்கும் அதே 3மணி நேரம் ஆனது.

கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள்.எனக்கென்னவோ,20,000 ஆண்டுகள் பழமையானது;பார்வதி இங்கே தவம் செய்ய வந்து 2,00,000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.பலசித்தர்கள் வாழுமிடம் இது.

சித்தர்களின் வீடு சதுரகிரி; சித்தர்கள் சிவனை வழிபடும் இடம் திரு அண்ணாமலை;சித்தர்கள் பார்வதியான ஆதி பரப்பிரம்ம சக்தியை வழிபடுமிடம் இந்த பர்வத மலை;என்பது எனது தாழ்மையான கருத்து.பல சந்தர்ப்பங்களில் பல மனிதர்கள் இங்கே சித்தர்களை தரிசித்திருக்கின்றனர்;இனியும் தரிசிப்பார்கள்.நமக்குத் தகுதியிருந்தால் நாமும் சித்தர்களை/ஏதாவது ஒரு சித்தரை தரிசிக்கமுடியும்.
திரு அண்ணாமலையைப்போல,இந்த பர்வதமலைக்கும் கிரிவலம் உண்டு.கிரிவலதூரம் 26 கிலோமீட்டர்கள் ஆகும்.

600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.இப்போது மீண்டும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் திருவல்லிக்கேணி ஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணிசங்கம் சார்பாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.இந்தத் திருப்பணியில் பங்குகொள்ளவிரும்புவோர் கீழ்க்காணும்முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.பணம்,சிமிண்டு,ஜல்லி,செங்கல்,வர்ணம்,சிற்பவேலைக்கு கைங்கர்யம் செய்யலாம்.
திருவல்லிக்கேணிஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம் பதிவு எண் 138/2009
7,VR பிள்ளைதெரு முதல் சந்து,திருவல்லிக்கேணி,சென்னை 5.

தலைவர் என்.ஆர்.தரணி செல்:99623 82601
செயலாளர் ஈ.பாண்டியன் செல்:98842 36697
பொருளாளர்கே.ஆர்.இந்திரன் செல்:98842 36757

இந்தத் திருப்பணி சங்கம் 36 அடி உயரமும்,1000கிலோ எடையுடன் கூடிய நவீன இடி தாங்கிக்கோபுரத்தை(super conductor Lightning Diverter) இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் பர்வதமலையின் மேலே 13.2.2010 அன்று நிறுவியுள்ளனர்.

குறிப்பு:திருஅண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் போளூர் அருகில் தென்பாதிமங்கலம் என்றகிராமத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.மலையின் அமைப்பு கிட்டத்தட்ட சதுரகிரியின் அமைப்புப்போலவே அமைந்திருக்கிறது.சதுரகிரிக்கு வேகமாக மலையேறமுடியும்.இங்கு அப்படி முடியாது.

உலகாளும் நாயகியே பார்வதி வாழ்க !!!

Sunday, October 24, 2010

சதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திருக்கையிலாயமும்

சதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திருக்கையிலாயமும்


சதுரகிரியின் பெருமைகள்
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்திருப்பது வத்றாப் ஒன்றியம் ஆகும்.இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் பெயர் தாணிப்பாறை ஆகும்.வத்ராப்பிலிருந்து காலையிலும் மாலையிலும் நகரப்பேருந்து வசதி தலா ஒருமுறை இருக்கிறது.ஆட்டோ வசதி 24 மணிநேரமும் வத்ராப்பில் கிடைக்கிறது.
தாணிப்பாறையிலிருந்து மலைக்காட்டுப்பாதை வழியாக 5 மணிநேரம் பயணித்தால் வருவதே சதுரகிரி.இந்த 5 மணிநேரத்தில் நான்கு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
தாணிப்பாறையிலிருந்து புறப்பட்டால் எண்ணெய்க்குடம் பாறை,அத்தி ஊற்று,கோரக்குண்டா,இரட்டை லிங்கம்,சின்னப்பசுக்கடை,நாவல் ஊற்று,பெரியபசுக்கடை,பிலாவடி கருப்பசாமி கோவில் என்ற இடங்களைக் கடந்துசென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தைச் சென்றடையமுடியும்.
சதுரகிரி பூலோகத் திருக்கையிலாயம் என்றழைக்கப்படுகிறது.
அத்திஊற்றிலிருந்து மலைப்பாதை நேர்செங்குத்தாக அமைந்திருக்கிறது.அந்த இடத்தில் ஓரிடத்தில் ஆங்கில எழுத்தான எஸ் வளைவில் பாதை வளைந்து செல்லுகிறது.லேசாக எட்டிப்பார்த்தோமானால் கீழே கிடுகிடு பாதாளம் தெரியும்.எப்படியும் சுமார் 2000 அடி கீழே தெள்ளிய ஓடை ஒன்று ஓடும்;அந்த நேர்குத்துப் பாதையைக் கடந்ததும்,ஒரு பசுவின் காலடித்தடம் தென்படும்;அதுவே காமதேனுவின் பாதத்தடம் ஆகும்.அதை வழிபட்டு சிறிது தூரம் சென்றதும்,ஒரு பெரிய மலைச்சமவெளியைக் காணலாம்.நாம் போகும் மலைப்பாதையிலிருந்து சுமார் 50 அடி கீழே இறங்கிட வேண்டும்.அப்படி இறங்கினால்,அமைந்திருப்பதுதான் கோரக்குண்டா!
இங்கே இயற்கையாகவே ஒரு கால்பந்து அளவுக்கு பல பள்ளங்கள் இருக்கும்;இந்தப் பள்ளத்தில் கோரக்கர் மூலிகை மருந்துகளையும்,மதுவையும் தயாரித்ததாகச் சொல்லுவார்கள்.
கோரக்குண்டாவில் ஒரே நேரத்தில் நூறு பேர்கள் குளிக்குமளவுக்கு அருவியும்,சுனையும்,குளமும் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு அமாவாசையன்றும் அருள்மிகு காளிமுத்துசுவாமிகள் ஆசிரமத்தினைச் சேர்ந்தவர்கள்காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தேன்,தினைமாவினால் ஒரு சிவலிங்கம் செய்து சிவமந்திரங்கள் சொல்லி வழிபட்டு,பூஜையின் முடிவில் அந்த சிவலிங்கத்தையே மீண்டும் மாவாக்கி அருட்பிரசாதமாக வழங்கிவருகின்றனர்.
கோரக்குண்டாவைக் கடந்ததும் ரெட்டைலிங்கம் வரும்;இந்தப்பாதை ஓரளவு அகலமான பாதையாக அமைந்திருக்கிறது.
போகர் 7000 என்ற புத்தகத்தில் சதுரகிரி மலைப்பிராந்தியத்தை போகர் பாடல்களாகவே விவரித்துள்ளார்.தாணிப்பாறையில் ஆரம்பித்து,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரையிலும் இருக்கும் மலைப்பகுதிகளை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார்.
உதாரணமாக அத்தி ஊற்றிலிருந்து தென்கிழக்கே அம்பெய்யும் தூரத்தில் கண்வர் மகரிஷி ஆசிரமம் அமைந்துள்ளது.அந்த ஆசிரமத்தின் முன்பக்கத்தில் எப்போதும் சந்தனம் வாடை கமழும்;
கண்வர் மகரிஷி ஆசிரமத்திலிருந்து மேற்கே கூப்பிடுதூரத்தில் அகத்தியரின் காட்டேஜ்போன்ற தங்குமிடம் அமைந்திருக்கிறது என புராதன லேண்ட் மார்க்காகவே போகர் பாடியிருக்கிறார்.
சதுரகிரிசுந்தரமகாலிங்கத்திலிருந்து மூன்று மணிநேரம் மலைப்பகுதிக்குள் பயணித்தால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்;
சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திலிருந்து காலை 5.30 மணிக்கு அங்குள்ள மலைவாசிப் பளியர்கள் வழிகாட்டிடப் புறப்பட்டால்,மதியம் 1 மணிக்குள் பெரிய மகாலிங்கத்திற்குச் சென்றுவிடலாம்;திரும்பவும் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திற்கு வர மாலை 6 மணியாகிவிடும்.அதே சமயம் அந்த ஒழுங்கற்ற மலைப்பகுதியில் காலை 5.30 முதல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்;அப்படிச்சென்றால் மட்டுமே பெரிய மகாலிங்கத்துக்குச் சென்றடைய முடியும்.வழியில் ஏராளமான பலவிதமான பழத்தோப்புக்கள் இருக்கின்றன.
பெரும்பாலானவர்களுக்கு பெரிய மகாலிங்கம் இருப்பதே தெரியாது;கேள்விப்பட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்றேஇதுவரை தெரியவில்லை;சித்தர்களும் சிவபெருமானும் வசிக்கும் இடமே இந்த பெரியமகாலிங்கம்தான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்த பெரியமகாலிங்கத்தின் அடையாளமே ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத ஆலமரம் ஒன்று அங்கே இருக்கின்றது.அதன் விழுதுகள் ஐந்தாக விரிந்து ஒரு ஐந்துதலை நாகம் போல் மிகப் பரந்தப்பரப்பை தன்னுள் வைத்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் வட கிழக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.அதன் பெயர் திருவண்ணாமலை;நிஜப்பெயர் திரு வண்ணான்மலை.அந்தக் கோவிலையொட்டி ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் தென் மேற்குத் திசையில் ஒரு குன்று அமைந்திருக்கிறது.அதற்கு நரிப்பாறை என்று பெயர்.அந்த நரிப்பாறையின் பின்புறம் ஒரு குகை அமைந்திருக்கிறது.ஒரே நேரத்தில் சுமார் 20 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய அளவுக்கு அந்த குகை அமைந்திருக்கிறது.இந்த குகைக்கு முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இந்த குகையிலிருந்து ஓராள் நுழையுமளவுக்கு ஒரு குகைப்பாதை போகிறது.இந்த குகை சதுரகிரிக்குச் செல்லுவதாக செவிவழிச்செய்திகள் இருக்கின்றன.
இந்தக் காலத்திலும் நரிப்பாறையின் குகைக்குள் ஓரிரவு யாராலும் தங்கிட முடியாது;ஆத்ம பலம் உள்ளவர்கள் மட்டுமே தங்கி சித்தர்களை தரிசிக்க முடியுமாம்.